திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.8 திருக்கடவூர் வீரட்டம் பண் - காந்தாரபஞ்சமம் |
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.
|
1 |
எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.
|
2 |
நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங்
காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.
|
3 |
மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக்
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.
|
4 |
சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்
படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங்
கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.
|
5 |
பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.
|
6 |
செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.
|
7 |
அடியிரண் டோருடம் பைஞ்ஞான் கிருபது தோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதல் மூர்த்தியுங்
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.
|
8 |
வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.
|
9 |
தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.
|
10 |
வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னையணி காழியான்
சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |